“இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா சாந்தியடைந்தது” – நற்றமிழன்
இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா கடந்த திங்களன்று (29/11/10) வெளியான நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாந்தியடைந்துள்ளது. ஆம், ஒக்டோபர் 21, 2010 அன்று தில்லியில் நடைபெற்ற “விடுதலை(Azadi) தான் ஒரே வழி” என்ற கருத்தரங்கில் அருந்ததிராய் ஆற்றிய உரையைக் கேட்டு கொந்தளித்தது இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா. வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அருந்ததி ராய், கிலானி மீது பின்வரும் வழக்குகள் தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது(1).
1) பிரிவு 124 அ (தேசதுரோகம்)
2) பிரிவு 153 அ (இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குதல்)
3) பிரிவு 153 ஆ (தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல்)
4) பிரிவு 504 (அமைதியை சீர்குலைத்தல்)
5) பிரிவு 505 (தவறான தகவல்களை பரப்பி மக்களை கலவரப்படுத்துதல்)
மேற்கூறிய பிரிவுகள் எல்லாம் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் நீருபீக்கப்படின் அவர்களுக்கு அதிகமான தண்டனையாக “ஆயுட்கால சிறை” தண்டனை கொடுக்கமுடியும். அனேகமாக எல்லா இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மாவும் இதை தான் வேண்டிக்கொண்டிருக்கும் என நான் எண்ணுகிறேன்.
(குறிப்பு: நீங்கள் இதுவரை காசுமீர் இந்தியாவுடைய ஒரு மாநிலம் என்று எண்ணிக் கொண்டிருந்தால், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும் ஏனென்றால் உண்மை அதுவல்ல. இதுவரை உங்களுக்கு கற்பிக்கப்பட்டது தவறான வரலாறு என்று எனது இந்த ஆய்வு கூறுகின்றது.)
சரி இப்படி இந்த இந்துத்துவ இந்தியர்கள் எல்லாம் கோபம் கொள்ளுமாறு அவர் எண்ண பேசினார் எனப் பார்ப்போம். “காசுமீர் எப்பொழுதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை”, “இந்தியா காசுமீருக்கு விடுதலை கொடுக்க வேண்டும்” என அவர் கூறிய கருத்துகளை கண்டித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அருந்ததி ராய் என்ற ஒரு நபர் தான் இப்படியான ஒரு கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கின்றாரா என்றால், உண்மை அவ்வாறு இல்லவே இல்லை.இதற்கு முன் இதே கருத்தை காந்தியும், நேருவும் கூறியுள்ளார்கள். இதோ அவர்களின் கருத்துகள்,
“பாகிசுதானுடன் சேர்ந்து கொள்ள வேண்டாம், இந்தியாவுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று நான் மன்னருக்கு ஆலோசனை கூற மாட்டேன். ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைச் சார்ந்ததே அன்றி அதை ஆளும் ஆட்சியாளரைச் சார்ந்தது அல்ல. காசுமீரி மக்களிடம் நீங்கள் இந்தியாவுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றீர்களா, பாகிசுதானுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திரமாக வாழ விரும்புகின்றீர்களா என கேட்க வேண்டும், அவர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன் படியே நடக்கட்டும் . ஆகத்து முதல் வாரம் 1947 சிரீநகரில் காந்தி ஆற்றிய உரை இது (2).
“காசுமீரின் மக்கள் இந்தியாவுடன் சேர விருப்பமில்லை என்றால் நாங்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்த போவதில்லை”. நேரு 1946
இந்த கருத்துகளை அவர்கள் வெளியிட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது, இந்த காலகட்டத்தில் தான் மன்னன் ஹரிசிங்கை “காசுமீரை விட்டு வெளியேற சொல்லும்” இயக்கம் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியது, இந்த இயக்கத்திற்கு ஆதரவாகவும், மன்னனுக்கு எதிராகவும் வாதாடிய, சிறையில் அடைக்கப்பட்டார் நேரு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நேரு மன்னனின் ஒடுக்குமுறை அரசை எதிர்த்தார் என்பது புலனாகின்றது.
பிரிட்டனின் ஆட்சியில் தற்போதைய இந்தியா, பாகிசுதான் போன்ற தேசங்கள் இருந்த பொழுது, காசுமீர் டோக்ரா மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது (அம்ரிசுதர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காசுமீரை பிரிட்டன் 75 இலட்சம் ரூபாய்க்கு டோக்ரா மன்னரிடம் ஒப்படைத்து விட்டது). இந்தியாவிற்கும், பாகிசுதானிற்கும் பிரிட்டன் விடுதலை வழங்கிய போது காசுமீர் ஒரு சுதந்திர தேசமானது(பிரிட்டன் சென்று விட்டதால், பிரிட்டன் போட்ட ஒப்பந்தங்கள் காலவதியாகிவிட்டது, மன்னர் வழி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வழமை போல விதிமுறைகளுக்கு புறம்பாக மன்னன் காசுமீரை ஆட்சி செய்தான்).
காசுமீர் ஆகத்து 17,1947லிருந்து ஒக்டோபர் 26,1947 வரை ஒரு சுதந்திர தேசமாக இருந்தது என்ற தீர்ப்பை சம்மு காசுமீர் நீதிமன்றம் 1953 அன்று மேகர் சிங் எதிர் சம்மு காசுமீர் அரசு வழக்கில் வழங்கியது(3). அதாவது ஒக்டோபர் 26, 1947அன்று மன்னன். ஹரிசிங், இந்தியாவின் கவர்னர் செனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் Instrument of Access என்ற ஒப்பந்தம் போட்டதிலிருந்து அது இந்தியாவின் வசமானது எனப் பொருள் (குறித்துக் கொள்ளுங்கள், அந்த காலகட்டத்திலும் கவர்னர் செனரல் மவுண்ட்பேட்டன் தான் 1947 ஆகத்து 15ற்கு பிறகு அவர் ஒன்றும் பிரிட்டனுக்கு சென்று விடவில்லை, பின்னர் இராஜாஜி 1950 சனரி 20 வரை கவர்னர் செனரலாக இருந்தார் (4)).
நேரு இந்த ஒக்டோபர் 26 ஒப்பந்ததிற்கு பிறகும் கூட காசுமீர் மக்கள் தான் யார் பக்கம் இணைய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும், நாங்கள் அவர்களுக்கு உதவ மட்டுமே சென்றுள்ளோம் என பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார் (5). இருந்தாலும் இந்துத்துவ இந்தியர்களுக்காக அந்த ஒப்பந்ததில் இருந்து சில வரிகள்…
இந்த ஒப்பந்ததில் இருக்கும் எந்த சரத்தும் எனது அரசின் இறையாண்மையையோ, எனது அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது. மேலும் அது எனது அரசின் தற்போதைய சட்டதிட்டங்களையும் கட்டுப்படுத்தாது.
Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this state, or, save as provided by or under this Instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State (6).
ஆனால் இன்று வரை நேரு கூறிய அந்த பொதுமக்களின் சுய நிர்ணய உரிமை கோரும் வாக்கெடுப்பை நடத்தவே இல்லை, என்பது உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக தன்னை காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு அசிங்கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். அன்று காந்தி காசுமீர் பற்றி கூறியது இன்றும் பொருந்தக் கூடியது, ஆம் அந்த தேசத்தின்(மக்களின்) இறையாண்மை இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. அதற்கு நேர்மாறாக அன்று நேரு எதிர்த்த அதே மன்னனின் பணியை இன்று அவரது வம்சாவளியினர் தொடர்ந்து கொண்டுள்ளார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை காசுமீர் மக்களின் முழக்கம் மட்டும் மாறவே இல்லை. ஆக்கிரமிப்பாளர்களே காசுமீரை விட்டு வெளியேறுங்கள், எங்களுக்கு விடுதலை கொடுங்கள்.
இதை கூறியதற்காக அருந்ததி ராயை கைது செய்கின்றார்கள் என்றால், காசுமீரில் மட்டுமல்ல இராணுவ ஆட்சியும், இந்துத்துவ வெறியும், அது இந்தியா முழுவதுமே உள்ளது என நமக்கு அவர்கள் உரத்து கூறுகின்றார்கள்.
தமிழகத்திற்கு தேச பாதுகாப்பு வழக்குகள் ஒன்றும் புதியவை அல்ல, கொளத்தூர் மணியும், வைகோவும், இன்ன பிறரும் அந்த வழக்குகளை பல முறை சந்தித்து வெறறியும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கும் சீமானுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வந்தால் வழக்கு முடிந்துவிடும் ஆனால் அரசு தரப்பு தான் இந்த வழக்கில் வாதாட சற்றே அஞ்சுகின்றது.

நான் வாழக்கூடிய நாட்டின் அரசாங்கம் ஒரு தவறு செய்தால் அதை சுட்டி காட்டி நல்வழிக்கு கொண்டுவருவது தான் அந்த தேசத்தில் வாழும் குடிமகனின் கடமை அன்றி, அந்த அரசாங்கம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் நான் எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அவ்வாறு கேள்வி எழுப்புவர்களை தேச துரோகி எனக் கூறுவது தேச வெறியே அன்றி தேச பக்தி அல்ல. காசுமீர் நிகழ்விலும், பழங்குடிகளுக்கு எதிராகவும், இன்ன பிற நிகழ்வுகளிலும் இந்த அரசு செய்யக் கூடிய தவறுகளை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்வதை தான் அருந்ததி ராய் செய்துகொண்டிருக்கின்றாரே தவிர அவர் செய்வது ஒன்றும் தேச துரோகமல்ல. மேலும், இந்தியாவில் வாழும் மக்களை நேசிப்பதும் இந்திய அரசை நேசிப்பதும் ஒரு சேர நடக்க முடியாது என்பதே உண்மை. இன்றைய நிலையில்., ஒன்றை நேசித்தால் இன்னொன்றை எதிர்த்தாக வேண்டும். மக்களை நேசிக்க வேண்டுமானால் இந்த அரசை எதிர்த்தாக வேண்டும். அதை தான் அருந்ததிராய் செய்தார். அவரை தேச துரோகி என்கின்றது இந்த இந்துத்துவ அரசு.”
குறிப்புகள்:
1) Times od India, Bangalore Edition, date:29/10/2010.
2) http://www.searchkashmir.org/2008/07/eminent-visits-kashmir-political.html
3) Conveyor Magazine August 2009 Edition, 16th Page
Also in International Crisis group report on Kashmir dated 21 Nov 2002. Page no 3.
4) http://en.wikipedia.org/wiki/Dominion_of_India
5) http://www.thehindu.com/news/national/article918002.ece
6) House of Commons Library research paper on Kashmir 30th Mrach 2004
Page no 47. Also available in below link
http://www.parliment.uk
பின் குறிப்பு: இந்த கட்டுரையின் தலைப்பு இவ்வாறு வைக்கப்பட்டதற்கான காரணம் youtubeல் அருந்ததிராயின் இந்த காணொளிக்கு காணகிடைக்கும் பின்னூட்டங்களும், இந்துத்துவ ஊடகங்கள், வெறியர்களின் அருந்ததிராயின் மீதான தாக்குதல்களே..
நற்றமிழன்.ப



No trackbacks yet.