ஆம்… அவள் இறந்து விட்டாள்
அவர்கள் கூறியது உண்மை தான், அவள் இறந்து விட்டாள். அவள் பெயர் வள்ளி, அவளது கணவன் கருப்பன். இருவருமே கடுமையான உழைப்பாளிகள். ஊரில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாக வேலை தேடிய கருப்பன், கங்காணி. சங்கரபாண்டியனின் பேச்சைக் கேட்டு குமரி மலை எசுடேட்டிற்கு பணி புரிய தன் மனைவி வள்ளியுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தான் வந்தான். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இருவரது உழைப்பும் அவர்கள் வாங்கிய நாற்பது ரூபாய் கடனை அடைக்கவும், அவர்கள் அங்கு வாழ்வதற்கு மட்டும் தான் போதுமானதாக இருந்தது. மூன்றாவது ஆண்டு அவர்கள் இந்த நரகத்திலிருந்து(தேயிலை தோட்டம்) எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டுமென்று தங்களுக்கு வரும் நோய்களையும், கடும் மழையையும் பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படியான ஒரு நாளில் தான் வள்ளிக்கு காய்ச்சல் வருகின்றது. காய்ச்சலுக்கான மருந்தை எடுத்துக் கொண்டே தொடர்ந்து உழைக்க காய்ச்சல் கட்டி அவளின் வயிற்றில் வளர தொடங்கி..பின்னாளில் அவளின் உயிரைப் பறித்துச் செல்வதில் முடிகின்றது … “எரியும் பனிக்காடு”(Red Tea) நாவல். ஆனால் இது தான் முழு நாவலா என்றால் இல்லை…..

எரியும் பனிக்காடு நாவல் நமக்கு சொல்பவை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் விதம், எழுத்தர்களின் நிலை, சாதியமும் அதன் கோர வடிவமும், மதமும், சாமியார்களும் ஒடுக்கப்படும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் விதம்…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும் தான் “எரியும் பனிக்காடு” நாவல் எடுத்தாளும் கதையும், அதன் அரசியலும் வாசகனுக்கு கூறுகின்றது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஆசிரியர் எடுத்தாண்டுள்ள மேற்கோள்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்…என்னளவில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இவ்வளவு பொருத்தமான மேற்கோள்களை நான் வேறெந்த நாவலிலும் பார்த்ததில்லை. இவ்வளவு மேற்கோள்களும் பல்வேறு நூல்களில் இருந்து எடுத்தாண்டவை என்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பை நமக்கு கூறுகின்றது. உங்களுக்காக சில மேற்கோள்கள்…
வர்க்க ரீதியாக தொழிலாளர்கள் சுரண்டுப்படும் நிலையை விளக்கும் ஒரு அத்தியாயத்திற்கு அவர் கையாண்டுள்ள மேற்கோள் இது…
“உயிரியல்ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமைவாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்”. - Memories and Studies – Willam James
தேயிலைத் தோடத்திற்குள்ளே அவர்கள் நுழையும் போது வரும் மேற்கோள்..
“இங்கே கால்பதிக்கும் முன் துறந்துவிடுங்கள் எல்லா நம்பிக்கைகளையும்”. இன்பர்னோ-டேன்டே.
முதலாளிகள் மட்டுமே தொழிலாளிகளை ஒடுக்குவதில்லை. நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமுமே தொழிலாளிகளை ஒடுக்குகின்றது என்பதே உண்மை(சில விதிவிலக்குகள் இருக்கலாம்) அதைப் பற்றி…..
“ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதே இல்லை. சர்வாதிகாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்”…

வெள்ளைக்காரர்களின் கருணை உள்ளத்தைக் கூறும் ஒரு சில வரிகள்…
“சக்கிலி நாய், பீ தின்னி நாய், கூட்டிக்கொடுத்த நாய்” என்று தூய்மையான தமிழில் தன் முன்னால் செருப்பு அணிந்திருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அங்கு பணிபுரிந்த எழுத்தர் ஒருவனை திட்டினான் தொரை.
முதலாளி வர்க்கத்தின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வரிகள்….
“மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித்தருவதற்காகவே இங்கே வந்திருக்கின்றோம். அதுவும் கொழுத்த இலாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதோ அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு இலாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்”.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் செவியில் தினமும் நூறு முறையாவது வந்து விழும் வார்த்தை “தேவிடியா பயலே…தேவிடியா முண்டை” என்பதிலிருந்தே அவர்கள் அங்கு எந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நமக்கு புரிய வைக்கும். அதுமட்டுமின்றி நாவலில் வரும் குமரிமலை தேயிலைத் தோட்டம் தான் தென்னிந்தியாவிலேயே ஒரளவு நல்ல நிலையில் உள்ள தேயிலைத் தோட்டம் என்று கூறப்படுகின்றது, அப்படியெனில் மற்ற தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த மக்களின் நிலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகவும் துயரகரமான ஒன்றாகவே இருந்திருக்கும் .இந்த நிலையில் அங்கு தன் குருதியை உறிஞ்சும் அதிகார வர்க்க அட்டைகளுக்கு நடுவில் வாழ்ந்து வரும் அம்மக்களை ஒரு சாமியார் தான் வாழவேண்டும் என்று நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மதத்தின், கடவுளின் மூலமாக அவர்களின் குருதியை மேலும் உறிஞ்சுகிறான். அடித்தட்டு மக்கள் மட்டுமே கடவுளை உண்மையாக நம்புகிறார்கள் என்பதும், அவர்களின் குருதியை மட்டுமே அடிப்படை மூலதனமாகக் கொண்டு இந்த மத நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதையும் இதன் மூலம் தெளிவு படுத்துகின்றார் நூலாசிரியர். இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு தேநீரிலும் பல தொழிலாளர்களின் செந்நீர்(Blood) கலந்தே இருக்கின்றது.
அம்மக்கள் இந்த தேநீருக்காக கொடுத்த விலை சொல்லிலடங்காதது. ஒடுக்கப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை பார்க்கவும், உங்களுக்கு மிகவும் பிடித்த தேநீருக்காக, காப்பிக்காக தங்களின் இன்னுயிரை துறந்த அந்த ஏழை மக்களின் நிலையை ஒரு முறையாவது காண வாசியுங்கள்…எரியும் பனிக்காடு நாவலை…ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் Red Tea என்ற மூல நாவலை வாசிக்கவும்.
……
நூலாசிரியரைப் பற்றி: எரியும் பனிக்காடு என்ற நாவல் Red Tea என்ற நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் செய்தவர் தோழர்.இரா. முருகவேள். மூலப்பதிவை எழுதியவர். பி.எச்.டேனியல். இவர் 1940 ஆண்டு தலைமை எழுத்தராக வால்பாறை காரமலை தேயிலைத் தோட்டத்தில் கால்பதித்து, தொழிலாளர்கள், எழுத்தர்களின் மிக மோசமான நிலையை கண்டு, அவர்களின் உரிமைக்காக போராடினார். இவரின் தலைமையின் கீழ் முதல் “தென்னிந்திய தோட்ட அலுவலர்கள் சங்கம்” உருவாகி, தென்னகம் முழுவதும் கிளை பரவியது. இச்சங்கங்கள் மூலம் அலுவலர்கள், தொழிலாளர்களின் உரிமைகளில் பல மீட்டெடுக்கப்பட்டன. அன்று அங்குவாழ்ந்த மக்களின்(தொழிலாளர்களின், அலுவலர்கள்) துயர நிலையையும், துரைகளின் ஒய்யார வாழ்வையும் வெளிக்கொணரவே அவர் இந்நூலை எழுதினார். சாதிய, வர்க்க ரீதியில் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கையை அவர் அப்படியே கூறியுள்ளார் என்றால் அது மிகையில்லை.
பின் குறிப்பு :நண்பர்களுக்கும்/ தோழிகளுக்கும்…..இந்த கட்டுரையில் இன்றைய சூழ்நிலையில் அநாகரிகமான பல வார்த்தைகள் உள்ளன. அன்றைய காலகட்டத்தின் உண்மைய நிலை அவ்வாறு தான் இருந்தது என்பதே உண்மை. அதனால் அவ்வார்த்தைகளை தவிர்ப்பது சரியான ஒன்றல்ல…இந்த கட்டுரை தான் எனது முதல் நூல் நோக்கு கட்டுரை என்பதால், இக்கட்டுரைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
நற்றமிழன்.ப

எரியும் பனிக்காடு (Red Tea) – பி.எச்.டேனியல்…தமிழில்..இரா.முருகவேள்
விடியல் பதிப்பகம்
88, இந்திரா பூங்கா 4ஆவது தெரு,
உப்பிலிப்பாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015
தொலைபேசி- 0422- 2576772
நல்ல முயற்சி …தொடர்ந்து இது போன்ற நூல்களைப் பற்றி எழுதவும்….
//பின் குறிப்பு :நண்பர்களுக்கும்/ தோழிகளுக்கும்…..இந்த கட்டுரையில் இன்றைய சூழ்நிலையில் அநாகரிகமான பல வார்த்தைகள் உள்ளன. அன்றைய காலகட்டத்தின் உண்மைய நிலை அவ்வாறு தான் இருந்தது என்பதே உண்மை.//
இது எனக்கு புரியவில்லை….சொ. அருண்
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி தோழர். அருண் . கண்டிப்பாக நான் படிக்கும் சிறந்த நூல்களை உங்களுக்கு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துகின்றேன்.
நான் கூறவந்தது “தேவிடியா, பீ தின்னிப் பயலே போன்ற வார்த்தைகள் முதன் முதலில் படிக்க வரும் வாசகர்களுக்கு அநாகரீகமான ஒன்றாகப் படலாம். ஆனால் அவற்றை தவிர்த்து அம்மக்களின் நிலையை அறிமுகப்படுத்துவது தவறான ஒன்றாகவே அமையும் என்பதால், அவ்வார்த்தைகள் தவிர்க்கவியாலததாகின்றது என கூறியுள்ளேன்.
தோழமையுடன்
நற்றமிழன்.ப
மிக அருமையான நூல் நோக்கு. நேர்த்தியான வாசகர் பரிந்துரை. நோய் மாத்திரமே அவளை கொன்றுவிடவில்லை. வர்க்க சுரண்டல் குறித்த அருமையான வரிகள். இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்று ஏங்க வைக்கும் மொழிநடை. வாழ்த்துக்கள் நண்பா.
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி தோழர். தமிழன்பன். எனக்கும் கூட இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் கட்டுரை மிகவும் நீண்ட ஒன்றாகி வாசகர்களுக்கு அயற்சியை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அச்ச உணர்வு தடுக்கின்றது..
தோழமையுடன்
நற்றமிழன்.ப
நூல் நோக்கு மிகச்சிறப்பாகவே உள்ளது, தொடர்ந்து இது போன்ற விடயங்களை அறிமுகப்படுத்துங்கள்.
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி தோழர். சிறீனிவாசன். கண்டிப்பாக நான் படிக்கும் சிறந்த நூல்களை உங்களுக்கு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துகின்றேன்.
தோழமையுடன்
நற்றமிழன்.ப
நல்ல பதிப்பு…தொடர்ந்து இது போன்ற நூல்களைப் பற்றி எழுதவும்
http://tamilpadaipugal.blogspot.com/